சென்னை: சென்னை அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விஞ்ஞானி, 2வது மனைவி, வீட்டு வேலைக்காரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த படப்பை அருகேயுள்ள கரசங்கால் எல்ஐசி நகரை சேர்ந்தவர் பால் (86). காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவிக்கு தெரியாமல் 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார் பால். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவர் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி ஓசூரில் அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசிக்கின்றனர்.
பாலும், 2வது மனைவியும் கரசங்கால் எல்ஐசி நகரில் சொந்தமாக இடம் வாங்கி, அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். பால், தான் சம்பாதித்து 100 சவரன் நகையை வைத்திருந்தார். அந்த நகையை ஒரு பையில் போட்டு இருக்கமாக கட்டி, வீட்டில் உள்ள ஷோபாஷெட் பின்புறம் மறைத்து வைத்திருந்தார். அவ்வப்போது, அதை பார்த்து கொள்வார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் 100 சவரன் நகைகள் வைத்திருந்த பை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். உடனே மணிமங்கலம் போலீசில் பால் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, தான் சம்பாதித்த 100 சவரன் நகையை 2வது மனைவி அபகரித்து விடுவாரோ என்ற பயம் பாலுக்கு இருந்துள்ளது. அதே நேரத்தில் அந்த நகையை முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாரோ என்ற சந்தேகம் 2வது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
அதனால் 2வது மனைவிதான் அந்த நகைகளை எடுத்தாரா அல்லது முதல் மனைவியின் பிள்ளைகளுக்கே பால் கொடுத்து விட்டு நாடகம் ஆடுகிறாரா, அவரே வேறு இடத்தில் மறைத்து வைத்துள்ளாரா அல்லது அவரது வீட்டுக்கு வரும் வேலைக்கார பெண் கைவரிசை காட்டினாரா எனவும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.