செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு அடுத்த வண்டலூர் தாலுகாவில் முருகமங்கலம் 1260 குடியிருப்புகள், கீரப்பாக்கம் 1760 குடியிருப்புகள், தாம்பரம் மாநகராட்சியில் அன்னை அஞ்சுகம் நகர் 192 மற்றும் பெரும்பாக்கம் 4284அடுக்குமாடி வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். மேலும் பயனாளிகள்அரசின் மானிய தொகை போக மீதி பங்குத் தொகையை செலுத்துவதற்கு விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
1. ஆண்டிற்கு 3 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெறக் கூடியவராக இருத்தல் வேண்டும். 2. இந்தியாவிற்குள் வேறெங்கும் சொந்த வீடு, வீட்டு மனை இருத்தல் கூடாது. 3. நகர்புற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, வரும் 22ம் தேதி காலை 11.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார், உணவுப் பங்கீடு அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை கொண்டு வரவேண்டும். பயனாளிகளுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
