×

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கி.பி.12ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு: ‘கல்லை வணங்கினால் மழை பொழியும்’

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பங்களாமேடு பகுதியில் நீர்மேலாண்மை தகவல் அடங்கிய கி.பி.12ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, முனிசாமி ஆகியோர்  களஆய்வு மேற்கொண்டனர். அந்த கல்வெட்டுகள் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
நாட்றம்பள்ளி பங்களாமேடு பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கமலநாதன் சில நாட்களுக்கு முன் கொடுத்த தகவலின்பேரில், அப்பகுதியில் உள்ள கல்வெட்டை எங்கள் குழு ஆய்வு செய்தது. 4.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை நிறப்பலகைக்கல்லில் இக்கல்வெட்டு வாசகம் அமைந்துள்ளது. ஸ்வத்திஸ்ரீ என ஆரம்பத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு 7 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆற்றின் வழியாக ஏரிக்கு செல்லும் கால்வாயை சீர்படுத்தி தந்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. அத்தியூர் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் இதே பெயரில் புதுப்பேட்டைக்கு அருகே ஒரு சிற்றூர் உள்ளது.

இந்த ஆற்றுக்கால்வாய்க்கு சித்திரமேழி என பெயர் உள்ளது. சித்திரமேழி என்றால் அலங்கரிக்கப்பட்ட ஏர்க்கலப்பை என பொருள். சித்திரமேழி பெரியநாட்டார் சபை என குழுவினர் அரியலூர் பகுதியை தலையிடமாக கொண்டு தமிழகத்தின் பல இடங்களில் வேளாண் பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் வணிகம் செய்துள்ளனர். விவசாயத்தைப் பெருக்கும் விதமாக பங்களாமேட்டிற்கு அருகே ஓடும் அக்ரகாரத்து ஆற்றுக் கால்வாய் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இக்கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கரப்ப ஏரிக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரமேழி என்ற கல்வெட்டு வாசகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அழகிய வடிவில் ஏர்க்கலப்பை, அதன் அருகிலேயே குத்துவிளக்கும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்றம்பள்ளி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து வரும் நீரோடைகளை சிறு ஆற்றுக் கால்வாயாக மாறி அதில் வரும் தண்ணீரை ஏரியில் சேமித்து, வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளனர். சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டின் வாயிலாக பண்டைத் தமிழ்மக்களின் நீர் மேலாண்மைப் பற்றி தெரிந்துகொள்ள சிறந்த சான்றாக உள்ளது.

இதைத்தொடர்ந்து பங்களாமேட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.19ம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டின் வாசகமானது “பூன குடத்தான்” என தொடங்குகிறது. சரியான மழை இல்லாதபோது புதுப்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் இக்கல்வெட்டிற்கு ஆடு வெட்டி பலி கொடுத்து பொங்கல் வைத்ததாகவும், இக்கல்லை வணங்கினால் மழைப்பொழியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர்.


Tags : Thirupattur District ,Nadrampalli 12th Century , Tirupati, Natrampalli, Inscription Discovery,
× RELATED ஒரு வாரமாக பெய்த மழையால் வாணியம்பாடி...