×

ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் மறியல்: மொடக்குறிச்சி அருகே பரபரப்பு

மொடக்குறிச்சி: ெமாடக்குறிச்சி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்து 700 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மஞ்சள், கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்படும்.

இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டததையடுத்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் காலிங்கராயன் பாசன பகுதியான பாசூர், சோளங்காபாளையம் பகுதிகளில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க காலதாமதம் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த காலிங்கராயன் பாசன விவசாயிகள் இன்று ஈரோடு- கரூர் ரோட்டில் உள்ள சோளங்காபாளையம் நால்ரோட்டில் டிராக்டரில் நெல்லை கொண்டு வந்து  சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Modakkurichi , Farmers' Stir, Modakkurichi,
× RELATED 300 ஆண்டு பழமையான மயானத்தை இடிக்க...