×

திருப்பதி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து காஞ்சிபுரம் பக்தர்கள் படுகாயம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பியபோது மலைப்பாதையில் கார் கவிழ்ந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பக்தர்கள் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், கபிலேஸ்வர நகரை சேர்ந்த தனசேகர் தனது நண்பருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்தார். ஏழுமலையானை தரிசித்துவிட்டு நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

திருப்பதி மலைப்பாதையில் வந்தபோது அலிபிரி சோதனைச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் தனசேகரும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Kanchipuram ,Tirupati hill , Tirupati hill road, car accident, devotees injured
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்