பெங்களூரு: திரைப்படம் தொடர்பாக விமர்சனம் செய்த நடிகை ரம்யா குறித்து ஆபாச பதிவிட்ட நபர் மீது பெங்களூரு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கன்னட திரைப்பட நடிகை ரம்யா, சமீபத்தில் வெளியான திரைப்படம் தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில், தான் பார்த்த திரைப்படம் நன்றாக உள்ளதாக தெரிவித்திருந்தார். ரம்யாவின் கருத்தை பலரும் வரவேற்று பதிவு செய்திருந்தார்கள்.
ஆனால் ‘ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ரம்யா குறித்து ஆபாசமான கருத்தை பதிவு செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரம்யா, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் தொலைபேசியில் ேபசியதாக தெரிகிறது.
அவர் அளித்த ஆலோசனையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரம்யா புகார் அளித்தார். இதையடுத்து, பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் உள்ள மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற நடிகை ரம்யா, ஆபாச பதிவிட்ட மர்மநபர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.