நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையோரம் உள்ள வயல்வெளிகளை ஒட்டியுள்ள பகுதியில் குவிந்து கிடந்த குப்பையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. மேலும் சுற்றியுள்ள வயல்களில் காய்ந்துகிடந்த புல்களிலும் பற்றி எரியபரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதியில் நர்சரி கார்டன் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் உத்தரவுப்படி தீயணைப்பு வீரர்கள் முனிராஜ்காந்தி, ஜெபகுமார், முருகன், ஆல்பர்ட்ராஜா உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.