ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில், சாக்கியம்மன் கோயில் பச்சை கரகம் பல்லக்கு உற்சவம், 30 ஆண்டுக்கு பின் விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா 27 கிராம மக்கள் சேர்ந்து மழை, விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த விழாவில், பல்லக்கு உற்சவம் பச்சை கரகம், தலைமேல் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், வானவேடிக்கையுடன் பல்லக்கு உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், பொதுமக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து பூஜை செய்து, விதைகளை தூவும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர் செல்லக்குமார் எம்பி, ராமமூர்த்தி மற்றும் சர்க்காலாப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சென்னப்பள்ளி, சுண்டகிரி, கொல்லப்பள்ளி, கூராக்கனப்பள்ளி, தொட்டூர் தேக்கலப்பள்ளி, பலவதிம்மனப்பள்ளி, சின்னார், கொலுமூர் உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன், வழக்கறிஞர், சென்னப்பள்ளி ஸ்ரீதரன், முன்னாள தலைவர் சென்னப்பள்ளி ஊராட்சி தலைவர் சரஸ்வதி செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.