ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில், மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், வல்லம், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமை தாங்கினார்.அதன்படி, 5 குறுவட்டங்களில் இருந்து 999 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. கடைசி நாளான நேற்று அதிகபட்சமாக 291 மனுக்கள் பெறப்பட்டன. 999 மனுக்களில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பட்டா மாறுதல் மற்றும் பெயர்மாற்றம் தொடர்பானது. இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். 36 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதில், பட்டா மாறுதல் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் மனுக்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது வரும் 15ம் தேதிக்குள் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.