அம்பத்தூர்: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அம்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார், வில்லிவாக்கம் ராஜாஜி நகர், காமராஜர் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில், தலா 50 கிலோ எடையுள்ள 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. ஆட்டோவை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, எண்ணூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்பதும், இவர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.அவரை கைது செய்து, 22 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.