உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பினாயூர் கிராமம் முதல் செங்கல்பட்டு வரை அரசு பேருந்து சேவை துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் எம்எல்ஏ சுந்தரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து, போக்குவரத்து துறை சார்பில் பினாயூர் கிராமத்திலிருந்து பழத்தோட்டம், களியப்பேட்டை, சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, குறும்பரை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு வரை செல்ல தடம் எண் 22 என்ற அரசு பேருந்து இயக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், நேற்றுமுன்தினம் உத்திரமேரூர் அடுத்த பினாயூர் கிராமத்தில் அரசின் பேருந்து சேவை துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பினாயூர் முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புதிய அரசு பேருந்து சேவையினை கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதி நிதிகள், கிராமப் பொது மக்கள் பலர் கலந்த கொண்டனர்.