உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி, 7ம் தேதி தொடங்கி, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா தலைமை தாங்கி வருகிறார். இதில், உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களான திருமுக்கூடல், பழவேரி, அருங்குன்றம், மதூர், சிறுதாமூர், பினாயூர், சீத்தனஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 119 மனுக்கள் நேற்று முன்தினம் பெறப்பட்டன. இதில், ஒருசில மனுக்களின் பரிசீலனையில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மாவட்ட மேலாளர் பவானி, உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் அரசு துறை அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.