சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம், மகாபலிபுரம் ரிசார்ட்டில் இந்து முறைப்படி கோலாகலமாக நேற்று நடைபெற்றது.விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார், நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 7 வருடங்களாக அவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர். லிவிங் டு கெதர் முறையில் சென்னை எழும்பூரிலுள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வாழ்ந்து வந்தனர். இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரிப்பது, வினியோகிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், இம்மாதம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் முடிவு செய் தனர். ஆனால், அங்கு அதிகமான விருந்தினர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மகாபலிபுரம் ரிசார்ட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி நேற்று காலை மகாபலிபுரத்தில் வடநெம்மேலி பகுதியிலுள்ள ஷெரட்டன் ரிசார்ட்டில் நயன்தாரா திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண்ணாடி மாளிகை போன்ற அரங்கிற்குள் காலை 10.20 மணிக்கு நயன்தாராகழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது. நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருக்க,விக்னேஷ் சிவன் பட்டுச்சட்டை, வேட்டி அணிந்திருந்தார்.
திருமண விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, மலையாள நடிகர் திலீப், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், கவுதம் மேனன், அட்லி, மணிரத்னம் மற்றும் குஷ்பு, கிருத்திகா உதயநிதி, ஷாலினி அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் மணமக்களை வாழ்த்தினர். தவிர, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.ரிசார்ட்டுக்கு வெளியே 100 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மீடியாவினர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. விருந்தினர்களிடம் செல்போன்களை வாங்கிக் கொண்ட பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த திருமண விழாவுடன் நயன்தாரா பற்றிய ஆவணப் படமும் உருவாக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கான ஒளிபரப்பு உரிமை ரூ25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு விருந்து வழங்கப்பட் டது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நேற்று திருமண விருந்து வழங்கப்பட்டது.திருமாங்கல்யம் எடுத்து தந்த ரஜினி திருமண விழாவுக்கு முதல் விஐபியாக ரஜினிகாந்த் வந்திருந்தார். நயன்தாராவுடன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன், அண்ணாத்த படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் திருமாங்கல்யத்தை எடுத்து தர, விக்னேஷ் சிவன் அதை வாங்கி நயன்தாராவுக்கு தாலி கட்டினார்.