×

கூட்டுறவு சங்க உறுப்பினர் பற்றி தகவல் தர உத்தரவு தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: தன்னாட்சி அந்தஸ்துடன் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும்படி உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மதனம் கிராமத்தில் இயங்கிவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து கடன் பெற்றவர்கள் விவரம், இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் உள்ளிட்டவற்றை வழங்கக்கோரி அதே ஊரை சேர்ந்த ஜீவா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.

ஜீவா கோரிய தகவல்களை வழங்குமாறு நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான இணை பதிவாளர் மற்றும் மாநில தகவல் ஆணையம் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இதனை எதிர்த்து மயிலாடுதுறை மாவட்ட மதனம் முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே. லெனின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கூட்டுறவு கடன் சங்கம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசு சார்ந்ததல்ல. சங்கத்தின் கணக்குகள் உட்பட அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவால் நிர்வாகிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் உறுப்பினர்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள், தனிப்பட்ட நபர்களின் பட்டா, சிட்டா, நகை போன்றவை தொடர்பாக தகவல் தர முடியாது. 2005ல் தகவல் பெறும் உரிமை சட்டமும் இடம் தரவில்லை. எனவே, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.பாலரமேஷ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல்களை அளிக்குமாறு மனுதாரர் சங்கத்துக்கு  உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு குறித்து மாநில தகவல் ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், தகவல் கேட்ட ஜீவா உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : ICC ,Information Commission , Quality Order on Information about Co-operative Society Members The ICC restrains the order of the Information Commission
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...