×

சிவகங்கை மாவட்டத்தில் அதிவேக வாகனத்தால் அதிகரிக்கும் விபத்துகள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் விபத்துகள் நடக்கின்றன. 2015ம் ஆண்டில் மாவட்டத்தில் 952 சாலை விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகளில் 261 பேர் மரணமடைந்தனர். 2016ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 322சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஆயிரத்து 604 பேர் காயமடைந்துள்ளனர். 333பேர் மரணமடைந்துள்ளனர்.2017ம் ஆண்டு மொத்தம் ஆயிரத்து 112சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 295 பேர் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 853சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 244பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டு 977சாலை விபத்துகளில் 265 பேர் மரணமடைந்துள்ளனர். 682 பேர் காயமடைந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 804 சாலை விபத்துகளில் 146 பேர் மரணமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டில் 954சாலை விபத்துகளில் 325பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு தற்போது வரை சுமார் 500க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் டூவீலர் விபத்துகளில் இறந்தவர்களே அதிகம். டூவீலர் மீது கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதியது உள்ளிட்ட சம்பவங்களால் இந்த விபத்துகள் நடந்துள்ளன. கனரக வாகனங்களான பஸ், லாரி உள்ளிட்டவைகள் அதிவேகத்தால் விபத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.சாலைகளில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன.

டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் தவிர எஞ்சியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர ஊனம் அடைந்துள்ளனர்.போலீசார் தெரிவித்ததாவது, ‘வாகனங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால் விபத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து வலியுறுத்துகிறோம். டூவீலர் விபத்துகளில் மரணம் அடைந்தவர்களில் 95சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களாவர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்துள்ளது’ என்றனர்.

Tags : Sivagangai district , By high speed vehicle in Sivagangai district Increasing accidents
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு