திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தின் அனைத்து வங்கிகள் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் கடன் வழங்கும் விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், திருவள்ளுர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னோடி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ.122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், சிறு - குறு தொழிற்கடன்கள், தனி நபர்க் கடன் என அனைத்து விதமான கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 3,009 நபர்களுக்கு பொதுகாப்பீடு அட்டைகளையும், 3,902 நபர்களுக்கு விபத்துக்காப்பீடு அட்டைகளையும், 733 நபர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டதற்கான அட்டைகள் மற்றும் ஆவணங்களையும், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 145 விவசாயிகளுக்கு கேசிசி அட்டைகளையும், வழங்கினார்.விழாவில், நகரமன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மோகன்தாஸ், தலைமை அலுவலக உதவிப் பொது மேலாளர் ஏ.மோகன்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் உதவிப்பொது மேலாளர் ராஜலட்சுமி, யூனியன் வங்கியின் உதவி பிராந்திய மேலாளர் ரவிசங்கர், பேங்க் ஆப் இந்தியா உதவிப்பொது மேலாளர் பழனி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவிப்பொது மேலாளர் நாராயணன் மற்றும் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.