சென்னை: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில், 200 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் மருத்துவம் மற்றும் சுகாதார குழுத்தலைவரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு அலுவலர் அரசு முதன்மைச் செயலாளருமான செந்தில் குமார் தங்கும் விடுதி உரிமையாளர்களை அழைத்து சுகாதாரம் தொடர்பாக ஆலோனை கூட்டம் நடத்தினார். அப்போது, அவர் பேசுகையில், ரிசார்ட், விடுதிகளில் தரமான உணவு சமைக்க வேண்டும், தரமான உணவு பொருட்களை பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறை படி எல்லாம் இருக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள், சமைப்பவர்களுக்கு மருத்துவ சான்று இருக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டுமென என அறிவுரை கூறி ஆலோசனை வழங்கினார்.