×

திருச்சி அருகே சோழர் கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு

முசிறி:  திருச்சி சமயபுரம் அருகே கண்ணனூரில் 14 மற்றும் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நில அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளையும் அளவுகோல்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த டாக்டர் ராசமாணிக்கனார், வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் ஆகியோர் கூறியதாவது:
சமயபுரம் அடுத்த கண்ணனூர் 14ம் நூற்றாண்டு அளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. அக்காலகட்டத்தில் இப்பகுதியில் உருவான பல கோயில்களில் முக்தீஸ்வரம் கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்று மாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இப்போது அரசின் திருப்பணிக்காக காத்திருக்கிறது.

இக்கோயிலில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 14ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நில அளவுகோல்களையும் 14 மற்றும் 18ம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்துள்ளனர். கல்வெட்டைஆய்வு செய்ததில் இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14ம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் இறைவனை கழுகிறை நாயனார் என்று அழைப்பதாக உள்ளது.

இந்தக் கல்வெட்டுகளில் முக்தன் செட்டியார், திருச்சி தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகியோர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கட்டுமான பகுதிகளில் திருப்பணிக்கு உதவியவர்களாக இருக்கலாம். ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ.மீ அளவினதாக, இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்பகுதியில் பதிவாகியுள்ள கோல் கட்டுமானத்திற்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக் கோலாகலாம். இந்த ஒத்த தச்ச கோல்கள் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அழைப்பதற்காக சோழர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நிலை அளவுகோல்கள் அந்தந்த ஊர் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. முக்தீசுவரர் பெருமண்டபம் தென்புற குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீட்டர் நீளமுள்ள அளவுகோல் அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்க பயன்பட்ட அளவுகோலாகும். நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்கு பட்டிகையில் 3.76 மீட்டர் நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன் கோயிலில் கண்டறியப்பட்ட நன்செய் கல்வெட்டும் இதே அளவில் உள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Tags : Trichy , Trichy, Chola period land scales, discovery
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...