×

தாளவாடி பகுதியில் புலி நடமாட்டம்: தமிழக, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் குழு கண்காணிப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் தமிழக, கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தை ஒட்டியுள்ள சேஷன் நகர் கிராமப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக கர்நாடக மாநிலம் காப்புக்காட்டிலிருந்து வெளியே வந்த புலி அப்பகுதியில் விவசாய விளை நிலங்களில் மேய்ந்த பசுமாடுகளை வேட்டையாடியது. இது வரை 3 பசுமாடுகள் புலி தாக்கி இறந்துள்ளன.

விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக முட்புதர்கள் அதிகமுள்ள தனியார் நபர்களின் பட்டா நிலங்களில் புலி மறைந்திருந்து வேட்டையாடி வருவதை தாளவாடி வனச்சரக அலுவலக பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி விபரங்களை சேகரித்தனர். இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா உத்திரவின் பேரில் பசு மாடுகளை இழந்த 3 விவசாயிகளுக்கும் வனத்துறையினால் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அங்கிருந்து புலியை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப தமிழக மற்றும் கர்நாடக மாநில வனத்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சாம்ராஜ்நகர் வனக்கோட்டம், பிளிகிரி ரங்கசாமி கோவில் புலிகள் காப்பகத்தை சேர்ந்த உதவி வனப்பாதுகாவலர் சுரேஷ், தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் மற்றும் 20க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று மதியம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டு புலியை கர்நாடக காட்டுப் பகுதிக்குள் திருப்பியனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மேலும் புலிகள் வந்து தங்குவதற்கு ஏதுவாக உள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்களை அப்பகுதியிலுள்ள முட்புதர்களை சுத்தம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையில் அருகிலுள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லாதவாறு வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Karnataka , Talawadi, Tiger Nomad, Tamil Nadu, Karnataka Forest Officer, Surveillance
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து