புதுக்கோட்டை: கர்நாடகா, உத்தரபிரதேச மாநில ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ஆர்எஸ்எஸ் தொண்டர் நீல்காந்த் மணி பூஜாரி. இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 4ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘உத்தரபிரதேசம், கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் இரவு 8 மணிக்குள் வெடிகுண்டு வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த உத்தரபிரதேச மாநில ஆர்எஸ்எஸ் அலுவலகத்தினர் இதுகுறித்து லக்னோ மதியாவ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வாட்ஸ்-அப்பில் பதிவிடப்பட்ட செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அந்த செல்போன் எண் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த ராஜ் முகமது (21) என்பவருடையது என்பதும், இவர் ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் சில செல்போன் எண்களை இணைத்துள்ளார். அந்த எண்களில் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தொண்டர் நீல்காந்த் மணி பூஜாரியுடையது. அந்த குழுவில் தான் வெடிகுண்டு மிரட்டலை பதிவு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லக்னோவில் இருந்து மதியாவ் போலீசார் நேற்று புதுக்கோட்டை வந்து, திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உதவியுடன் ராஜ் முகமதுவை கைது செய்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் டிப்ளமா கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் என தெரியவந்தது. பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, உத்தரபிரதேசத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், ராஜ்முகமதுவுக்கு மனநிலை பிரச்னை உள்ளதாகவும், அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். எனினும், உரிய ஆவணங்களுடன் லக்னோ நீதிமன்றத்தில் முறையிடுமாறு போலீசார் கூறி சென்றனர்.