பாரிஸ்: ஈரானில் கொலை, போதை பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் உட்பட 12 கைதிகளை அந்நாட்டு அரசு தூக்கிலிட்டுள்ளது. நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு அருகில் உள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெடான் சிறைச்சாலையில் 12 கைதிகளை ஈரான் அரசு தூக்கிலிட்டது. இவர்களில் 11 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவர்.
இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல், கொலை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பலுச் இன சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 12 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஈரான் அரசு அல்லது ஊடகங்களில் அறிவிக்கப்படவில்லை. ஈரானில் மரண தண்டனைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்தாண்டு மட்டும் ஈரானில் குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர்; கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.