கிணத்துக்கடவு : நெகமம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அரசு விலை ஆதார திட்டத்தின் கீழ் 330 டன் கொப்பரை ரூ.3.50 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
தென்னை விவசாயிகளுக்கு, கொப்பரைக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க வேண்டும் என தமிழகத்தில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 21 மாவட்டங்களில், அரசு கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, கொப்பரை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம், நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அரசு விலை ஆதார திட்டத்தின் கீழ் கொப்பரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் நிலையங்கள் நிர்ணயம் செய்துள்ள தரத்தில், நன்கு உலர வைத்த கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வரலாம். கொப்பரை கிலோவுக்கு, 105.90 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கொப்பரை விவசாயிகளிடமிருந்து 330 டன் கொப்பரை ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
மேலும், கொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், கொள்முதல் நிலையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான விலை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வேளாண் விற்பனை வாரியம் வாயிலாக நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.