கடலூர்: புவனகிரி அருகே குறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(27). உளுந்தூர்பேட்டை 10வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி கடலூர் எஸ்பி அலுவலகம் அருகே விஷம் குடித்து சாலையில் மயங்கி விழுந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் செல்வகுமாரின் பெற்றோர், நேற்று மதியம் கடலூர் புதுநகர் போலீசில் அளித்த புகார் மனுவில், எனது மகன் செல்வகுமார் பெரிய கொல்லை கிராமத்தை சேர்ந்த அனிதாவிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றார். அசலையும் வட்டியையும் சேர்த்து கொடுத்துள்ளார். ஆனால், வட்டியில் சிறு தொகை பாக்கி இருந்துள்ளது.அதற்காக என் மகனிடம், அனிதா வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூ.12 லட்சம் தரவேண்டும், இல்லையென்றால் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உன்னை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியதால் என் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறியிருந்தார். இதையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர்.