சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் மு.க.ஸ்டாலின் 17.6.2021 அன்று பிரதமரை சந்தித்தபோது பன்மாநில நதியான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த சூழலில், 17.6.2022 அன்று நடைபெற உள்ள 16வது ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணை திட்டம் பற்றிய பொருள் விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என அதன் 25.5.2022 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 4.6.2022 தேதியிட்ட கடிதத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற கருத்து, உச்ச நீதிமன்றத்தின் 18.5.2018 அன்று அளித்த ஆணைக்கும், ஒன்றிய அரசு அதன் 1.6.2018 அன்று காவிரி ஆணையத்தின் செயல்கள் மற்றும் அதிகார வரம்புகள் பற்றிய அறிவிப்பிற்கும் முரண்பாடாக உள்ளதால், ஆணையத்தின் கருத்து சரி இல்லை என்றும், இப்பொருளை விவாத பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உறுப்பினர் 16வது கூட்டத்தில் இப்பொருள், ஆணையத்தின் எல்லை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளதால் இதுகுறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசின் எதிர்ப்பை உறுதியுடன் தெரிவிப்பார்.மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அதன் வரம்பை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க கூடாது என உத்தரவிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (7ம் தேதி) தமிழ்நாடு அரசால் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களையும், உரிமையையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியுடன் எடுக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.