சென்னை: அமமுக பொதுச் செயலாளர்டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடை பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல். அந்த ஆட்சியை நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அரசு, இவர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்திருக்க வேண்டும். மாறாக, அவர்களின் போராட்டத்தை நசுக்கும் வகையிலும் வேலைநிறுத்த காலத்துக்கு சம்பளப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது இந்த அரசு. இந்த ஜனநாயக விரோத மனப்பான்மையை கைவிட்டு, போராடும் ஊழியர்களை அழைத்துப்பேச வேண்டும்.