திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக நோரோ வைரஸ் தொற்று நோய் பரவுகிறது. திருவனந்தபுரத்தில் 2 குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதுதவிர பன்றிக்காய்ச்சல், ஷிகெல்லா உள்பட பல தொற்றுநோய்கள் கேரளாவில் அதிகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் நோரோ என்ற ஒரு வகை தொற்று கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் 2 குழந்தைகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் உடலில் பரவினால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, தலைவலி காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதற்கிடையே நோரோ வைரஸ் மேலும் பரவாமல் இருக்க உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேரள அரசுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.