ஊத்துக்கோட்டை: ஏனம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்து பயன்பாடில்லாமல் புதர்மண்டி கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும்.
இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதில், மழை காலங்களில், நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், இந்த கட்டிடம் கடந்த 10 வருடங்களாக சேதமடைந்துள்ளது. எனவே, இதை யாருமே பயன்படுத்தவில்லை. இதனைத்தொடர்ந்து, ஏனம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தான் ஊராட்சி அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தில் தற்போது மாடு மற்றும் ஆடுகள் கட்டப்பட்டு, புதர் மண்டி கிடக்கிறது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.