பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி மலையில் எழுந்தருளி காட்சி தரும் வள்ளி தெய்வானை சமேத செங்கல்வராயர் திருக்கோயில் சிறப்பு பெற்றது. திருத்தணி முருகன் கோயில் உப கோயிலான இக்கோயிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக சிறப்பு பூஜைகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வைகாசி சஸ்டியையொட்டி மலைக்கோயில் அடிவாரத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, மலைக்கோயிலில் சத்ருசம்ஹார ஹோம பூஜைகள் நடைபெற்றது.இதில் 10க்கும் மேற்ப்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்று சுகந்த புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு ஹோம பூஜைகள் மற்றும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக திருப்படிகள் அமைக்க ரூ1 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சமூக சேவகர் ராஜேந்திர பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரகாஷ், கரிம்பேடு சாய்பாபா கோயில் நிர்வாக குழு தலைவர் கரிம்பேடு குமார், திமுக பிரமுகர் சி.ஆர்.பட்டடை என்.வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.