தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான ஆங்கிலப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்திற்கு தேவையான மண்ணை பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அனுமதியின்றி வெட்டியெடுத்து பயன்படுத்தியதாக, கடந்த மாதம் 14ம் தேதி பிரபு என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கலெக்டர் முரளீதரன், இப்புகார்கள் மீது தாலுகா அளவிலான கண்காணிப்புக்குழு கள ஆய்வு செய்து, மாவட்ட கண்காணிப்புக் குழுவின் மேல்நடவடிக்கைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தாலுகா அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள், புகார் மனுதாரருடன் தணிக்கை மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்திற்கு முன்பாக புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.