×

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோயில் தீட்சிதர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.சேகர்பாபு கலந்துரையாடல்

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி  இன்று (06.06.2022) கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தீட்சிதர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, கனகசபை நடராஜரை தரிசித்து தீட்சிதர்கள் மகிழ்ச்சியோடு அனைத்து சன்னிதானங்களும் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர். அதன் பின்பு தீட்சிதர்கள் கோரிக்கைகளை வைத்தனர். அரசின் நிலைபாடுகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். அடுத்தடுத்து வருகின்ற நிகழ்வுகள் தீட்சிதர்கள், அரசு சட்டதிட்டங்கள் இந்து சமய அறநிலையத்துறை அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவு ஒரு சிறு மனக்கஷ்டங்கள் கூட இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்பான வேண்டுகோள்.

அனைவரும் இம்மண்ணின் மைந்தர்கள் ஆகவே நல்ல ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரச்சனைகளையும் கனகசபை நடராஜர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள், வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகின்ற முதல்வர் நம் முதல்வர். இன்னார் இனியார் என்று பார்க்க கூடாது என்று எங்களுக்கு எல்லாம் கட்டளை குறிப்பிடுகின்றார்.

இத்திருக்கோயில் தீட்சிதரர்களிடம் கலந்தாலோசித்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவற்கு அனைத்து உதவிகளையும்,  தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும். மேலும், 180 க்கு மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கின்றது.  இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருந்த 12, 959 திருக்கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தி அந்த வட்டியின் மூலமாக அந்த ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் விளக்குகள் கூட எறிய வைப்பதற்கான சூழ்நிலைகளை இல்லாத திருக்கோயில்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு அந்த தொகையை முதற்கட்டமாக 129.59 கோடியை இந்து சமய அறநிலையத்துறையின் பணம் அல்ல அரசியல் உடைய பணத்தை ஒதுக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

இந்த ஆண்டின் மானியக்கோரிக்கையின் சுமார் 2000 கோயில்கள் இந்த ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு 40 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற அர்ச்சகர்களுக்கு இதுவரை எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல்  இருந்தது, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 1000 மாதம் தோறும் அவர்களின் வங்கி கணக்கில் எடுத்து செல்வதை கருத்தில் கொண்டு 10,109 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 மாதம் அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த ஆட்சி துலாகோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்குகின்ற ஆட்சி என்று அமைச்சர் தெரிவித்தார். 


Tags : K. Sekarbabu ,Minister ,Hindu ,Religious Affairs ,Dikshitars ,Chidambaram ,Arulmigu Natarajar Temple , Chidambaram, Natarajar, Temple, Dikshitars, Department of Hindu Religious Affairs
× RELATED சொல்லிட்டாங்க…