ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றில் ஈன்றன்பாளையம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மகன் ருத்தீஷ் (13), பொன்னேரி சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி மகன் கோகுல் (13). 9ம் வகுப்பு படித்து வந்த இவன், பாட்டி வீட்டிற்கு வந்துள்ளான். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஓடி வந்து அரை மணி நேரம் தேடி இருவரையும் சடலமாக மீட்டனர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். ஆரணி ஆற்றில் பள்ளி விடுமுறையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் ருத்தீஸ் மற்றும் கோகுல் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.