பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த மைலர்வாடா கிராமத்தில் நியவிலைக் கடை செயல்பட்டு வருகின்றது. நியாவிலைக் கடைக்கு மூன்று கி.மீ தூரத்தில் உள்ள ரெட்டியூர் சித்தப்பனூர்,அருந்ததியர் காலனி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மைலர்வாடா நியாவிலைக் கடைக்கு சென்று ரேஷனில் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடை விற்பனையாளர் முறையாக கடை திறந்து பொருட்கள் வினியோகப்பதில்லை என்று குற்றம் சாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று கிராம மக்கள் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது. 3 கி.மீ சென்று வர ஏழை எளிய கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இந் நிலையில், மத்திய அரசு சார்பில் ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுவதில்லை என்றும், மண்ணெணெய் வழங்கப்படுவதில்லை என்றும், பருப்பு இருந்தால் பாமாயில் இல்லை என்றும் பாமாயில் இருந்தால் எண்ணெய் இல்லை என்று கூறுகின்றனராம். கேள்வி கேட்டால், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் அனைவரும் எனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எங்கு சென்று புகார் செய்தாலும் கவலையில்லை என்று பொதுமக்களிடம் பேசுவதாக குற்றம் சாட்டினர். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து முறையாக ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.