ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி. இவரது செல்போன் எண்ணை மர்ம நபர்கள் கடந்த 1ம் தேதி ஹேக் (தகவல் திருட்டு) செய்தனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் கலெக்டரின் செல்போனில் இருந்த அதிகாரிகள், விஐபிக்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது எண்ணுக்கு கலெக்டரின் முகப்பு படத்துடன் கூடிய எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதில் கலெக்டர் கேட்பது போன்று, அமேசான் கிப்ட் கார்டு லிங்க்கை அனுப்பி, உள்ளே சென்றால் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 கிப்ட் கார்டுகளுக்கு பணம் செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அலுவலர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அந்த நபர் இந்தியில் பேசியுள்ளார். இதனால், மோசடி நபர்கள் இதுபோன்ற குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டரின் கவனத்திற்கு அதிகாரிகள், அலுவலர்கள் எடுத்து சென்றதன்பேரில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் தொலைபேசி எண்ணை ஹேக் செய்தது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.