திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது கணவர் செல்வராஜ்(56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். இந்நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. உயிருடன் இருக்கும்போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் திடீரென்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அந்த குறையை போக்கும் விதமாக பத்மாவதி குடும்பத்தினர் ரூ.5 லட்சம் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். பட்டு வேட்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகு சிலையை தத்ரூபமாக உருவாக்கினர். இந்த சிலையை வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜின் மெழுகு சிலையை பார்த்து கண்ணீர் விட்டார். இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.