×

உ.பி மருத்துவமனையின் அலட்சியத்தால் எறும்பு கடித்து பச்சிளங்குழந்தை பலி?

மஹோபா: உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், எறும்பு கடித்து பச்சிளங் குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் முதாரி கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர ரைக்வார் மனைவி சீமா, மாவட்ட மகளிர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மே 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரால் அந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தை இருந்த வார்டு மிகவும் அழுக்காகவும், எறும்புகள் இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், அங்கிருந்த மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதுகுறித்து யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், குழந்தை திடீரென இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனை அலட்சியத்தின் காரணமாகவே எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதாகக் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் பிரசவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 6,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனைக்கு வந்த கோட்வாலி பகுதி போலீசார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : UP , UP hospital negligence kills infant after ant bite?
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை