×

லுக்அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு செல்ல அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக்அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி, வெளிநாடு சென்று வர மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மரணத்தை தொடர்ந்து அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. முன்னதாக அவர் தேடப்படும் குற்றவாளியாக விசாரணை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. மும்பை போலீஸ், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பாட்னா போலீஸ் விசாரணை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு என்று பல்வேறு அமைப்புகளும் வழக்குகளை விசாரித்து வந்ததால், ரியா சக்ரபோர்த்தி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 2 (நேற்று முன்தினம்) முதல் வரும் 5ம் தேதி வரை அபுதாபிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு செல்ல இருக்கிறார். இத்தனை வழக்குகளுக்கு மத்தியிலும், ஜாமீனில் வெளியே வந்த சில மாதங்களில், மீண்டும் திரைப்படங்களில் ரியா சக்ரபோர்த்தி நடித்து வருகிறார்.

Tags : Riya Sakraporthi , Riya Chakraborty allowed to go abroad with lookout notice: Special court order
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!