×

புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் தொழில் நிறுவன அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் மீதான தங்களின் ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் அளித்துள்ளன.  

இருப்பினும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இவ்வரைவு விதிகளை தமிழில் அளித்தால் தங்களுக்கும், தங்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் வரைவு விதிகளை தெளிவாக புரிந்து கொண்டு தங்களின் கருத்தை தெளிவாக வெளியிட இயலுமென தெரிவித்தனர். இதனையடுத்து, மேற்படி வரைவு விதிகளை தமிழாக்கம் செய்ய வல்லுநர்கள் சிலர் நியமிக்கப்பட்டு இத்தமிழாக்கப் பணி தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மேற்படி மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு அவை மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் நிறுவன அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றின் மீது அவர்களின் கருத்துக்கள் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு பெறப்படும்.  மேலும் அவர்களின் கருத்துக்களை நேரடியாக பெறுவதற்கு மீண்டும் விவாதக் கூட்டங்களும் நடத்தப்படும்.

தமிழ் வரைவு விதிகளின் மீதான கருத்துக்களை எழுத்து மூலமாகவும், நேரடி விவாதம் மூலமாகவும் பெறப்பட்ட பின்னரே இவ்வரைவு விதிகள் இறுதி செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 9,90,665 தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டு 4,06,268 பயனாளிகளுக்கு ரூ.299.02 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Labor Welfare , New Labor Code, State Draft Rule, Act, Department of Labor Welfare
× RELATED போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சு