மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாத்திரை மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதிகளில் உள்ள பழைய விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளானது நடைபெற்று வந்தது. இதில் பள்ளம் தோண்டும் பணியில் ஈரோட்டை சேர்ந்த வடமாநில தொழிலாளி ஈடுபட்டபொழுது, திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக்கொண்டார். சிக்கிக்கொண்ட தொழிலாளியை மீட்க பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில் மீட்க முயற்சி மேற்கொண்ட பொழுது தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தொழிலாளியின் தலையை மீட்ட நிலையில் உடலை மீட்கும் பணி நடைபெற்றது. சுமார் ஒன்றை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வடமாநில தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளம் தோண்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.