×

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, குடியரசு தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

நிரந்தர நீதிபதிகளான 9 பேருக்கும், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நாளை பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைக்கவுள்ளார். நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ள 9 நீதிபதிகளில் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி தம்பதிகள் ஆவர். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்த 9 பேரும் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களை வரவேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்க உள்ளார். நாளை பதவியேற்க உள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai High Court , Chennai, High Court, Additional Judge, Permanent Post
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...