சேலம்: சேலத்தில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வடமாநில வாலிபரை, குட்கா விற்பனை போட்டியில் கும்பல் கடத்திச்சென்றது. சேலம் டவுன் பட்டைகோவில் பகுதியில் வசிப்பவர் மூலாராம்(52). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், டவுன் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம்(22), நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 பேர் அவரை சட்டையை பிடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். தகவலறிந்து டவுன் போலீசார் சென்று கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடத்தல் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அப்போது அந்த கார் ஓமலூர் நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஓமலூர் பகுதியில் தனிப்படை போலீசார் முற்றுகையிட்டு தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வடமாநிலத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் மளிகை கடை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்று வருகிறார்கள். இதன் மூலம் தினமும் பல லட்சங்களை சம்பாதிக்கிறார்கள். கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் அவர்கள் ஓராண்டிற்குள் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். இவர்களிடம் இருந்துதான் லோக்கல் வியாபாரிகள் போதை பொருட்களை வாங்கிச் சென்று விற்பனை செய்து போலீசாரிடம் சிக்கிகுகின்றனர்.ஜெயராம் மீது 8 மாதங்களுக்கு முன்பு ஹான்ஸ் விற்பனை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரது கடையில் வேலை செய்த ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலையில் இருந்து நின்று, ஓமலூரில் ஹான்ஸ், குட்கா வியாபாரம் செய்து வருகிறார். வியாபார போட்டி தொடர்பாக ஜெயராம் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.