சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பண மதிப்பு இழப்பீடு மற்றும் கொரோனா கால பேரிடர்களால் பல்வேறு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் மூடப்படும் நிலை உருவாக்கப்பட்டது. தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பணியாளர்களின் பணி இழப்பும், வணிக இழப்புக்கும் பணப்புழக்க குறைவுக்கும் காரணமாக அமைந்தது. அதனால், ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இன்றுவரை நீடித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை புனரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளித்திடவும் முதல்வர் துறை சார்ந்த அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோரையும் அழைத்து பேசி தீர்வு காணவும், அரசு எடுத்துவரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு வணிக நிறுவனங்கள் பின்புலமாக நின்றிடவும், நிதி ஆதாரங்களை அளித்து ஆதரவுக்கரம் நீட்டி, தொழில்துறையை மீட்டெடுத்து தமிழகம் இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து பொருளாதாரத்தையும் நிறைவு செய்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.