×

பெரியகுளம் அருகே இடிந்து விழுந்த அங்கன்வாடி மேற்கூரை: குழந்தைகள் உயிர்தப்பினர்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் கட்டப்பட்டு 35 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பின்னர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த கட்டிட மேற்கூரை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் இந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் திடீரென மேற்கூரை நேற்று காலையில் இடிந்து விழுந்தது. அப்போது, குழந்தைகள் அங்கன்வாடி மையம் அருகே வெளியே விளையாடிக் கொண்டிருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அங்கன்வாடி மேற்கூறை சேதமடைந்து விரைவில் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam , Periyakula, Anganwadi roof, children,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...