×

திருத்தணி அருகே மாந்தோப்பில் ரூ.1 கோடி செம்மர வேர் பறிமுதல் : 4 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே மாந்தோப்பில் பதுக்கிவைத்திருந்த ஒரு கோடி மதிப்பு செம்மர வேர்களை வனத்துறையினர் கைப்பற்றி, 4 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சித்தூர் சாலையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு. இவர் வனத்துறையில் பணியாற்றி இறந்துவிட்டார். இவரின் மனைவி ராணி (56). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் தாழவேடு கிராமத்தில் இருக்கிறது. இவர்களது நிலத்தில் அரசு அனுமதி பெற்று செம்மரம் வளர்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அனுமதியுடன் செம்மரத்தை வெட்டி விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில், அரசின் அனுமதிபெறாமல் செம்மரத்தின் வேர்களை தோண்டி எடுத்து தோட்டத்தில்  உள்ள ஷெட்டில் பதுக்கிவைத்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த செம்மரக்கட்டை புரோக்கர் சங்கர் (55) என்பவர் நிலத்தின் உரிமையாளர் ராணியை சந்தித்து, செம்மர வேர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு ராணி சம்மதம் தெரிவித்ததையடுத்து சங்கர், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியில் செம்மரக்கட்டை விற்பனை செய்துவரும் நாராயணவனம் பகுதியை சேர்ந்த துரைவேலு (52), திருப்பதி பகுதியை சேர்ந்த நாராயணரெட்டி (47), திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சீனு (34) ஆகியோருடன் செம்மர கட்டைகளை விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிலையில், தோட்டத்தில் இருந்து செம்மரக் கட்டை கடத்தப்பட உள்ளது என்று கிடைத்த தகவல்படி, திருப்பதி செம்மரக்கடத்தல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, மாவட்ட வனச்சரக அலுவலர் நரசிம்மராவ்  ஆகியோர் தலைமையில் 10க்கு மேற்பட்ட போலீசார் நேற்று தாழவேடு பகுதியில் உள்ள ராணியின் தோட்டத்தில் இருந்து செம்மர வேர்களை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றபோது சுற்றிவளைத்து மேற்கண்ட 4 பேரை கைது செய்தனர். இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில், அரசு அனுமதியின்றி கடத்த முயன்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட 4 டன் செம்மர வேர்களின் மதிப்பு ஒரு கோடி இருக்கும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Manthop ,Thiruthani , Manthoppu, sheep root confiscated, 4 arrested
× RELATED மாமல்லபுரம் அருகே பரபரப்பு மாந்தோப்பில் திடீர் தீ: போலீசார் விசாரணை