ஊட்டி: இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா நேற்று காலை நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமினை பார்வையிடுவதற்காக வந்தார். அவரை தமிழக-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி அருகே மாவட்ட கலெக்டர் அம்ரித் புத்தகம் வழங்கி வரவேற்றார். நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி முருகன், மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கூடலூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு தன்து மனைவியுடன் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அங்கு வளர்ப்பு யானைகள் பராமரிக்கும் விதம், அவற்றிற்கு வழங்கப்படும் உணவுகள், அவை தயாரிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டறித்தார். தொடர்ந்து உணவு தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டார். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். சிறிது நேரம் அங்கு முகாமிட்டிருந்த அவர், பின்னர் பந்திப்பூர் வழியாக புறப்பட்டு சென்றார்.