×

மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலையில் 118 பேருக்கு கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை: சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூன்று மாதங்களில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தற்போது அது 6 நபர்களாக குறைந்துள்ளது. சென்னை அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இருந்து இங்கு படிக்க மாணவர்கள் வருகின்றனர். சென்னை வளாகத்தில் மட்டும் 5,670 பேர் படிக்கின்றனர். இவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 1242 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2,943 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 1329 பேருக்கான முடிவு வெளிவந்ததில் நேற்று 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை மொத்தம் 118 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் 1614 பேருக்கான முடிவு வர வேண்டும். அப்போது இந்த தொற்று இன்னும் 50 பேருக்கு கூட வாய்ப்புள்ளது.  சென்னையில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குரங்கம்மை இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Tags : Corona ,Melakkottaiyur ,Minister ,Ma Subramaniam , Corona for 118 students at a private university in Melakkottaiyur: Minister Ma Subramaniam's study
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...