செஞ்சி: செஞ்சியில் மலைவாழ் மக்களுக்கு அமைச்சர் மஸ்தான், ரூ.60 லட்சம் மதிப்புள்ள தனது சொந்த இடத்தை இலவசமாக வழங்கினார். செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் (இருளர் பழங்குடியினர்) வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ல் தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் இருளர் இன மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் தன் பெயரில் உள்ள புஞ்சை நிலத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மனைவி மற்றும் மூத்த மகளுடன் செஞ்சி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று தமிழக ஆளுநர் பெயருக்கு இலவசமாக எழுதி கொடுத்தார். அப்போது செஞ்சி சப்-ரிஜிஸ்டிரார் ஆறுமுகம், தாசில்தார் பழனி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர். அமைச்சர் எழுதிக் கொடுத்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும்.