பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் கிராமத்தை சேர்ந்த கலையரசன். அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர்கள் இருவருக்கும் டிராக்டரில் தண்ணீர் வழங்குவதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கலையரசன் அதே பகுதியில் வந்தபோது செல்வம், ராம்குமார், அருண்குமார், ஜோதி, சுகன்யா ஆகியோர் உருட்டுக்கட்டையால் அவரை திடீரென சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கலையரசன், மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, சாந்தகுமாரின் மனைவி சுகன்யா கொடுத்த புகாரின்பேரில் பிரபா, சிலம்பரசன், ரகு, ஸ்ரீராம், பாஸ்கர், கதிர், குணால் ஆகியோர் மற்றும் மற்றொரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் சிலர் என மொத்தம் 12 பேர் மீது மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், செல்வத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 11 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கோஷ்டி மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.