புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட 36-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமான் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் தினந்தோறும் பயின்று, சத்துணவு சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் இந்த அங்கன்வாடி மையத்தில் 36 குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் பாசிப்பயிறு வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட குழந்தைகள் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்று அரை மணி நேரத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு, மயக்க ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட குழந்தைகளின் பெற்றோர், அவர்களை அழைத்துக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் உணவு தயாரிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர். பின்னர், பாதிக்கப்பட்ட 36 குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். முதற்கட்ட ஆய்வில், சமைக்கப்பட்ட சத்துணவில் புழுக்களும், பூச்சிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.