×

திருடப் போன வீட்டில் உணவை சாப்பிட்டு சாவகாசமாக கொள்ளையடித்த ஆசாமிகள்: அடுத்த வீட்டிலும் கைவரிசை

மதுரை: கொள்ளையடிக்க சென்ற வீட்டின் சமையல் அறையில் இருந்த உணவு மற்றும் பழங்களை சாப்பிட்டு, அடுத்தடுத்த வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து தூங்கினார். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர்.

இதை தொடர்ந்து அருகேயிருந்த விவசாயி மாயகிருஷ்ணன் என்பவரது வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள் இருளாயி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்தனர். இதையறிந்த இருளாயி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்மநபர்கள் மின்னல்வேகத்தில் தப்பியோடி விட்டனர். இதன்பிறகு சத்தம் கேட்டு சசிக்குமார் கீழே ஓடிவந்து பார்த்தார். அவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்தது.

மேலும் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஆரஞ்சு, ஆப்பிள், சமையல் அறையில் இருந்த உணவு ஆகியவற்றை பொறுமையாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு, தோசை கரண்டியை வைத்து பீரோவை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Asamis , Assamese who ate food and casually looted the stolen house: handcuffs in the next house
× RELATED தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட...