×

பஸ்சில் சில்மிஷம் செய்த ஆசாமியை அடித்து உதைத்த இளம்பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பஸ்சில் பயணம் செய்யும்போது சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசாமியை ஒரு இளம்பெண் யாருடைய துணையும் இன்றி தனி ஆளாக அடித்து உதைத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்தவர் சுனில். ராணுவ வீரர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மனைவி சந்தியா சுனில். மானந்தவாடி பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சந்தியா மானந்தவாடி அருகே ஒரு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரது அருகே அமர்ந்துள்ளார். குடிபோதையில் இருந்த அந்த நபர், சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சந்தியா, பின்னால் காலியாக இருக்கும் வேறு இருக்கையில் சென்று அமரும்படி அவரிடம் கூறினார். ஆனால் அந்த ஆசாமி அதை கேட்காமல் தொடர்ந்து சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து அவர் கண்டக்டரிடம் புகார் செய்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த நபரை வேறு இருக்கையில் அமர வைத்தார். அதன் பிறகு அந்த ஆசாமி சந்தியாவையும், கண்டக்டரையும் ஆபாசமாக திட்டத் தொடங்கினார்.

இதையடுத்து மற்ற பயணிகள் சேர்ந்து அந்த நபரை பஸ்சிலிருந்து இறக்கி விட்டனர். ஆனால் அவர் பஸ்சின் முன்பு நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார். பின்னர் பஸ்சின் வெளியே நின்றபடி ஜன்னல் வழியாக கையைவிட்டு சந்தியாவிடம் அவர் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சந்தியா பஸ்சில் இருந்து கீழே இறங்கி அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தார். மற்ற பயணிகளும் அவரை தாக்க வந்தபோது நானே அந்த ஆசாமியை கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி தொடர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினார்.

வலி தாங்க முடியாமல் அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒரு கடைக்காரர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது குறித்து சந்தியா கூறியது: பொது இடங்களில் பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற நபர்களை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Assamese , Teenager beats up Assamese on bus: Video goes viral on social media
× RELATED அசாம் மக்கள் நிலங்களை...